ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் குறித்து ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட கருத்து, பழங்குடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் அவர், “பாகிஸ்தான், தன் மக்களைச் சரியாக கவனிக்க முடியாமல், மின்சாரம், தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தாக்குதலை நடத்துகிறது. இது தொடரும் பட்சத்தில், இந்தியா பாகிஸ்தானைத் தாக்க தேவையில்லை. பாகிஸ்தான் மக்கள் தாங்களே தங்கள் அரசை எதிர்த்து எழுந்து விடுவார்கள். அவர்கள் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடி மக்கள்போல், எந்தவொரு பொது அறிவும் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.
இந்தக் கருத்து பழங்குடி மக்களை இழிவுபடுத்துவதாக கண்டித்து, ஜூன் 17ஆம் தேதி தெலங்கானா பழங்குடியினர் நலச் சங்கம் ஹைதராபாத்தின் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து, ஹைதராபாத் போலீசார், “சாதி, மதம், இனத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகள் தெரிவிப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா தற்போது மன்னிப்புக் கோரி விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது :
நான் பயன்படுத்திய ‘பழங்குடி’ என்ற சொல்லின் அர்த்தம் வரலாற்று மற்றும் பொதுவான பொருளில் இருந்தது. கடந்த காலங்களில் உலகம் முழுவதும் பழங்குடியினர் மற்றும் குல அமைப்புகள் அடிப்படையில் மனித சமூகம் இருந்தது. எனது கருத்தின் நோக்கம், நமது இந்திய பழங்குடியினரைக் குறிவைப்பதோ, அவர்களை இழிவுபடுத்துவதோ அல்ல. அவர்களை நான் மதிக்கிறேன். அவர்கள் இந்த நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் மதிக்கத்தக்க அங்கமாக உள்ளனர்.
என் சொற்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலோ, யாரைனும் புண்படுத்தியிருந்தாலோ, அதற்கு நான் மனமார்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை பற்றிப் பேசுவதே எனது ஒரே நோக்கம். உயர்த்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் எனது தளத்தைப் பயன்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒருபோதும் பிரிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.