வரதட்சனை கேட்டு பெண்ணின் கருவை கலைக்கச் சொல்லி கொடுமைப்படுத்திய கணவர்:- தான் கொண்டுவந்த சீர்வரிசை பொருள்களை அவரது வீட்டோடு வைத்து கொளுத்திவிட்டதாகவும், குத்தாலம் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்:-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் தேவகி. இவருக்கு மயிலாடுதுறை சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சீதனமாக 8 சவரன் நகை, கட்டில், மெத்தை, பீரோ, டைனிங் டேபிள் மற்றும் அனைத்து வீட்டு உபகரணப் பொருட்களுடன் குடிபுகுந்தபோதும், சீர் போதவில்லை என்று ரத்தினவேல் தினமும் குடித்துவிட்டு தேவகியை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், தேவகியிடம் இருந்து நகைகளை வாங்கி விற்றும் குடித்துள்ளார். குடித்துவிட்டு, சிகரெட்டால் தேவகியின் உடலில் சூடு போட்டு கொடுமைப்படுத்திய ரத்தினவேல், சீர் ஜாமான்களுடன் சேர்த்து வீட்டைக் கொளுத்திவிடப் போவதாக அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தியதால் தேவகிக்கு கடந்த ஆண்டு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேவகி மீண்டும் கருத்தரித்துள்ளார். அந்த கருவையும் கலைக்க சொல்லி ரத்தினவேல் மற்றும் அவரது தாய் ஈஸ்வரி ஆகியோர் சண்டையிட்டு தேவகியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்ட தேவகி கடந்த 5 மாதங்களாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள வீடு கடந்த மாதம் 29-ஆம் தேதி தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக அக்கிராம மக்கள் தேவகிக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனது கணவர் தனது திருமண சீர் சாமான்கள் அனைத்தையும் வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விட்டதாக குத்தாலம் காவல் நிலையத்தில் அன்றைய தினமே தேவகி புகார் அளித்துள்ளார். ஆனால், ஒரு வாரமாகியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் இன்று மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த தேவகி மற்றும் அவரது குடும்பத்தினர் உரிய விசாரணை நடத்தி தனது கணவர் ரத்தினவேல் மற்றும் மாமியார் ஈஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

















