வளவனூரில் இலவச கண் பரிசோதனை முகாம்: ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றனர்
விழுப்புரம், மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அம்மா அவர்களின் 86-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் சக்தி. கோப செந்தில்குமார் B.E. அவர்களின் அறிவுறுத்தலின்படி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வளவனூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
வளவனூர் ஆனந்தம் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இம்முகாமில், வளவனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
பரிசோதனையில் கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
கிராமப்புற மக்களிடையே கண் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் இம்முகாம் ஏற்படுத்தியது.
முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வளவனூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாட்டாளர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.















