சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் வசூல் சாதனையைப் பதிவு செய்த ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான முதல் பாகம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்த அந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றியை அடுத்து, ஜெயிலர் 2 உருவாக்கம் ஆரம்பிக்கப்பட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் தகவல்களில், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றம் கொடுத்த சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் இருவரும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடர்பாக நடிகர் மோகன்லாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், மோகன்லால் மீண்டும் ஜெயிலர் 2-இல் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.