குத்தாலம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீ கன்னியம்மன் ஆகிய இரண்டு கோயில்கள் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காந்தி நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் ஸ்ரீ கன்னியம்மன் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த நேற்று முதல்கால யாகசால பூஜை தொடங்கி இன்று இரண்டாம் கால யாகசால பூஜை நிறைவுற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.














