சென்னை : எழும்பூர் மேம்பாலம் அருகே கார் தீ விபத்து

சென்னை :
சென்னையில் இன்று காலை வேளையில் ஒரு காரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நான்கு பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேப்பேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மகேஸ்வரன், தனது குடும்பத்தினரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி விட காவலர் குடியிருப்பில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக காரில் பயணித்துக்கொண்டு இருந்தார்.

அவர், எழும்பூர் மேம்பாலம் அருகே வலது பக்கம் திரும்ப காத்திருந்தபோது, காரில் இருந்து திடீரென புகை வெளியே வந்ததை கவனித்தார். உடனே அச்சமடைந்த அவர், காரில் இருந்த குடும்பத்தினரை அவசரமாக கீழே இறக்கினார்.

சில நிமிடங்களில் காரில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த கீழ்பாக்கம் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினாலும், கார் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version