மயிலாடுதுறை மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் மாயூரநாதர் கோயில் யானையை வயதைக் காரணம் காட்டி ஓய்வு அளிக்கத் தேவையில்லை: அந்த யானைக்கு நல்ல பராமரிப்பு வழங்கப்படுகிறது என யானை ஆர்வலர் கருத்து:-
சென்னை உயர்நீதிமன்றத்தில் அலோக் அஸ்வனி குப்தா என்பவர் 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படும் யானை அபயாம்பிகைக்கு, 60 வயதை நெருங்குவதால், அதற்கு ஓய்வு அளிக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், யானை ஓய்வுபெற அனுமதிக்காவிட்டால், அதை துன்புறுத்துவது போலாகிவிடும். யானை மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. தலைமை வனப் பாதுகாவலர் அனுப்பிய குழு அந்த யானையை பரிசோதித்தபோது, கான்கிரீட் தரையில் நிற்க வைத்துள்ளனர். யானை குளிப்பதற்கான தொட்டி உள்ளிட்ட வசதிகள் இல்லை என வாதிடப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில், யானை நல்ல முறையில், முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைக்கு எந்த காயமும் இல்லை என வாதிடப்பட்டது. அப்போது இடையீட்டு மனுதாரரான விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், யானையை வேறு இடத்துக்கு மாற்றுவது அதன் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் மாயூரநாதர் கோயில் யானையை வயதைக் காரணம் காட்டி ஓய்வு அளிக்கத் தேவையில்லை, அந்த யானைக்கு உரிய பராமரிப்பு வழங்கப்படுகிறது என மயிலாடுதுறையை சேர்ந்த யானை ஆர்வலர் சாய்விக்னேஷ் கருத்து தெரிவித்துள்ளார்…














