மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் ஜி பேயில் 50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு. தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றதடுப்பு, சட்டவிரோத பொருட்கள் மற்றும் மதுபான கடத்தல், மணல் கடத்தலை தடுத்தல், சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், மாவட்ட எல்லை பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பணிகளில் மாவட்ட எல்லைபகுதிகளான ஆணைக்காரன்சத்திரம், நண்டலாறு, ஆயப்பாடி, நல்லாடை, கழனிவாசல், திருவாலங்காடு, உள்ளிட்ட பகுதிகளில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணிரேமும் காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். காவல் சோதனை சாவடிகளில் போலீசார் லஞ்சம் பெறுவதாக குற்றசாட்டு எழுந்துவரும் நிலையில் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் சாலையில் கழனிவாசல் கிராமத்தில் உள்ள காவல் சோதனை சாவடியில் ஜிபேயில் 50ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது. அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதன்மோகன் என்பவர் லாரியில் வந்தபோது தன்னிடம் கழனிவாசல் காவல் சோதனைசாவடியில் போலீசார் 50 ரூபாய் லஞ்சமாக பெற்றதாகவும், போலீசார் கொடுத்த நம்பருக்கு ஜிபேயில் பணம் அனுப்பியதாகவும் பெரம்பூர் காவல்நிலையத்திற்கு நேற்று இரவு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று தான் அனுப்பிய பணம் மீண்டும் தனக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணத்தை திருப்பி அனுப்பிய நபரின் ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சினேகா பிரியா உத்தரவின் பேரில் கழனிவாசல் காவல் சோதனைசாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர் தெய்வசிகாமணியை ஆயுதப்படைக்கு மாற்றி அவரிடமும், அவருடன் பணியில் இருந்த ஊர்காவல் படை காவலர் கலியபெருமாள் என்பவரிடம் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.















