தமிழ் சினிமாவில் 1995-ஆம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை தேவயானி. அதன்டுத்தே, 1996-ல் அஜித்துடன் நடித்த காதல் கோட்டை திரைப்படம் அவரது திரைப்பயணத்திற்கு முக்கிய மையமாக அமைந்தது.
பின்னர், சரத்குமாருடன் சூரியவம்சம், கமல்ஹாசனுடன் தெனாலி, விஜயுடன் ப்ரண்ட்ஸ், ஷரத்துடன் ஆனந்தம், அர்ஜுனுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் போது இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் வளர, இருவரும் குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் திருமணத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் தேவயானி உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார், அது இணையத்தில் வைரலாகி வருகிறது. “என் வாழ்க்கையில் என் அம்மாவை மீறி நான் செய்த ஒரே ஒரு விஷயம் என் திருமணமே. நாளடைவில் அது சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், அது சரியாகவே இல்லை.
என் முதல் குழந்தை பிறந்தபோதும், அம்மா என்னை வந்து பார்க்கவில்லை. அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இரண்டாவது குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து தான் அம்மாவை பார்த்தேன். நான் அம்மா ஆன பிறகு தான், என் செயலில் என்ன தவறு இருந்தது என்பதை உணர்ந்தேன். ஆனால், இது எல்லாம் என் தலையில் எழுதி இருக்கிறது” என கூறியுள்ளார்.