சென்னை :
நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் இடையே நடைபெற்று வரும் தனிப்பட்ட பிரச்சனை இன்று மீண்டும் பொது வெளியில் தீவிரமாக பேசப்படுகிறது. அண்மையில் ரவி மோகன் தனது மாமியாரை குற்றம் சாட்டிய அறிக்கையை வெளியிட்டார். அதற்கு அவரின் மாமியார் பதிலளித்த நிலையில், தற்போது ஆர்த்தி ரவியும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ஆர்த்தி, “கண்ணியமாக இருக்க நினைப்பவர்களை விட நாடகம் செய்யுபவர்களுக்கு தான் இன்று முக்கியத்துவம் அதிகம்” என ஆரம்பித்து, கடந்த நாட்களில் தன்னை சுற்றி ஏற்பட்ட சூழ்நிலைகள் தான் பேச வைக்கும் சூழ்நிலையை உருவாக்கினதெனத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் திருமண வாழ்க்கை பணம், அதிகாரம், கட்டுப்பாடு அல்லது பிறர் தலையீடு காரணமாகத் தான் சீரழிந்தது என்று இல்லை. மூன்றாவது நபரின் வருகையே பிரிவிற்கு முக்கியக் காரணம்,” எனத் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னை கட்டுப்படுத்தும் மனைவி என குற்றம் சுமத்தப்படுகிறேன். ஆனால் கணவரின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பதே ஒரு மனைவியின் கடமையல்லவா? என்னால் எங்கள் குடும்ப உறுதி காக்கப்பட்டதை நான் பாவமல்லாமல் பெருமையாகத்தான் பார்க்கிறேன்,” என்றார்.
தன்னுடைய கணவர், திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறிய விதத்தையும் ஆர்த்தி விளக்கியுள்ளார். “விலை உயர்ந்த ஆடைகள், சொத்துகள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை யாரும் துரத்தவில்லை,” எனக் கூறியுள்ளார்.
பிள்ளைகளை தந்தை சந்திக்காததையும் விமர்சித்து, “தன் விருப்பத்தால் தான் அவர் பிள்ளைகளை விலக்கி வைத்திருக்கிறார். எங்கள் பிள்ளைகள் தங்கள் தந்தையை சந்திக்க விரும்புகிறார்கள், ஆனால் பாதுகாப்பாக அவர்கள் உணரும் இடங்களில் மட்டுமே சந்திக்க விரும்புகிறார்கள்,” என ஆழமான வேதனையுடன் கூறியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக தனது கனவுகள், லட்சியங்களைத் துறந்து கணவருக்காக வாழ்ந்ததையும், அவருக்காக தன்னுடைய கல்வியை விட்டுவிட்டதையும் அவர் பகிர்ந்துள்ளார். “இப்போது என் கண்ணியம், நேர்மை அனைத்தும் பொது விவாதமாக மாறி விட்டது. ஆனால் இன்னும் நான் நீதிமன்ற நீதியை நம்புகிறேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.
“நான் பலவீனமானவள் இல்லை, என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் துணையோடு மீண்டும் உயர்ந்து நிற்பேன். இதற்கு மேல் பேச எதுவும் இல்லை,” எனக் கூறியுள்ள ஆர்த்தி ரவியின் இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.