மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக மணல்மேடு போலீசார் வழக்கப்பதிவு செய்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் மாணவி தற்கொலை செய்த கொண்டதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் கடலங்குடி ஊராட்சியில் 16 வயது மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு (27.04.2026) அவரது வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். மாணவி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை குற்றவியல் நீதித்தறை நடுவர்-1 உமல்பரிதா மாணவியிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். தொடர்ந்து மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். சிறுமியின் பெற்றோர் மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சிறுமியை பாத்திரம் தேய்க்க சொன்னதாகவும், அதன் காரணமாகவே சிறுமி, பூஜை அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக புகார் அளித்ததன் பேரில் மணல்மேடு காவல் நிலைய போலீசார் 194 BNS பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இன்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்து வீட்டுக்கு மாணவியின் பிரேதம் எடுத்து வரப்பட்ட நிலையில், மாணவி படித்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் திருவிடைமருதூர் தாலுக்கா மணக்குன்னம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததால் மனம் உடைந்த மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கடலங்குடி மெயின்ரோட்டில் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்திய நிலையில் பேச்சுவார்த்தை நடத்திய மயிலாடுதுறை டி.எஸ்.பி பாலாஜி விசாரணை நடத்த அவகாசம் வேண்டும் என்றும், நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளதால் உரிய விசாரணை நடத்தி குற்றம் ஊர்ஜிதமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.














