திருவாரூர் : மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேடால் நோயாளிகள் சிகிச்சை பெற பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு தவறான சூழ்நிலை தற்போது அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் வசிக்கும் கலைராணி என்ற பெண், கடும் வயிற்று வலியால் துடித்துக்கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சையை அளித்த டாக்டர்கள், அவருக்கு உடனடியாக குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரை செய்தனர்.
எனினும், குளுக்கோஸ் பாட்டிலுக்கு தேவைப்படும் ஸ்டாண்ட் கிடைக்காத நிலையில், அருகிலுள்ள வார்டுகளில் தேடியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து, நோயாளியின் உறவினரை அழைத்து, குளுக்கோஸ் பாட்டிலை அவரது கையில் கொடுத்து தூக்க வைத்து, அதன்மூலம் சிகிச்சை தொடரப்பட்டது என்பது பெரும் பரிதாபமாகும்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், “அந்த நேரத்தில் ஸ்டாண்ட் அருகிலேயே இல்லை. ஆனால் அருகிலிருந்த வார்டிலிருந்து உடனடியாக எடுத்து வரப்பட்டு, பாட்டில் அதில் வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தரமான சிகிச்சை சேவையின் குறைபாடுகள், அரசு மருத்துவமனைகளின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கி, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் நிலையில் உள்ளது.