சென்னை ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த வினோதினி என்பவர் பியூட்டிஷியனாக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்ய சென்றிருந்தார்.
அப்போது, மணப்பெண் தங்க நகைகளை வைத்திருந்த அறையை பூட்டி விட்டு சாப்பிடச் சென்ற வினோதினி, திரும்பி வந்தபோது அறை முன்பு சந்தேகத்துக்கிடமான நிலைமையில் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தார். அதில் ஒருவர் அறையை திறந்து உள்ளே எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த உடனே அவர் மணப்பெண் வீட்டினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனே மூவரையும் பிடித்து விசாரித்ததில், நகைகளை திருட முயற்சித்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் வந்த போலீசார் விசாரணை நடத்தி, மூவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமார் (33), பத்ரி விஷால் (19), சூரஜ் (28) என அடையாளம் கண்டனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வந்தவர்கள் என்றும், மாற்றுச்சாவியை பயன்படுத்தி திருட முயன்றது தெரியவந்தது.
போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.