சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் – இளைஞர்களின் தன்னெழுச்சியான முயற்சியால் 55 நாட்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி, ஏரியின் கரைகளை பலப்படுத்திய இளைஞர்கள் – அரசோ, தொண்டு நிறுவனங்களோ நிதி உதவி அளித்து ஏரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது செட்டிச்சத்திரம் அய்யம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலம் காலமாக வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் விவசாய தொழிலையே தங்கள் முழு நேர தொழிலாக கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றனர்.
வடவாறு பாசன பகுதியாக இருந்து வரும் இப்பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அய்யம்பேட்டை ஏரி என்ற ஒரு மிகப்பெரிய ஏரி பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த ஏரி மூலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வேளாண்மை செய்து வந்தனர்
30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் காரணமாக இந்த ஏரி முழுவதும் வற்றி வறண்டு காய்ந்து விட்டது. அதன் பிறகு இந்த ஏரி இருந்த இடமே தெரியாமல் முழுவதும் சீமை கருவேல மரங்கள் படர்ந்து காடாக காட்சியளித்தது.
காலப்போக்கில் அய்யம்பேட்டை பகுதியில் ஏரி ஒன்று இருந்தது என்பதையே அப்பகுதி மக்கள் மறந்து விட்டனர். ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். மேலும் வேளாண்மைக்கும், ஆழ்துளை கிணறுகளையே இவர்கள் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 250 அடிக்கும் கீழாக சென்றுவிட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, நீர் பற்றாக்குறையை போக்குவது எப்படி என்று விசாரிக்கும் போது தான், ஒரு காலத்தில் நீர் மிகை பகுதியாக இந்த கிராமம் இருந்தது என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
மேலும் 110 ஏக்கர் கொண்ட அய்யம்பேட்டை ஏரி என்று ஒன்று இருந்ததும் அவர்களுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இளங்காற்று நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பித்து அதன் மூலம் ஏரியை தூர்வாரும் பணியை செய்ய முடிவெடுத்தனர்.
ஏரி ஒன்று இருப்பதையே மறந்த இக்கால மக்களுக்கு, அவர்களின் முந்தைய தலைமுறையை சார்ந்த முதியவர்களை அழைத்து அய்யம்பேட்டை ஏரி இருப்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஏரியின் பலன்கள் குறித்தும் அவர்களுக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து அய்யம்பேட்டை கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள், அவர்களது நண்பர்கள், மேலும் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கும் இளைஞர்கள் ஆகியோரின் முயற்சியால் சுமார் மூன்று லட்சம் அளவுக்கு நிதி திரட்டி சில மாதங்களுக்கு முன்பு அய்யம்பேட்டை ஏரியை இளைஞர்கள் தூர்வாரத் தொடங்கினர்.
முழுவதும் சீமை கருவேல மரங்களால் நிறைந்திருந்த ஏரியை தூய்மைப்படுத்த தொடங்கிய இளைஞர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் முழுவதும் படர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றினர்.
சீமை கருவேல மரங்களை அகற்றியதும், ஏரியின் பரப்பளவை பார்த்து இளைஞர்கள் ஆச்சரியப்பட்டு உற்சாகத்துடன் தூர்வாரும் பணியை தொடர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏரியின் கரைகளை பலப்படுத்தும் வகையில், மேடான பகுதியிலிருந்து மண்ணை எடுத்து ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் நிரப்பி ஏரியின் கரைகளை பலப்படுத்தினர்.
இளைஞர்களின் தன்னெழுச்சியான இந்த முயற்சியால், 3 லட்சம் அளவுக்கு நிதி திரட்டி சீமை கருவேல மரங்களை அகற்றி, ஏரியின் கரைகளை பலப்படுத்திய இளைஞர்கள், 55 நாட்களுக்குப் பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக மேற்கொண்டு பணியை தொடர முடியாமல் தற்போது நிறுத்தி வைத்துள்ளனர்.
தன்னார்வ அமைப்பினரோ, தொண்டு நிறுவனத்தினரோ அல்லது அரசோ இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து ஏரியின் தூர்வாரும் பணியை தொடர்ந்து நடத்தி, ஏரியை மீண்டும் கடல் போல் மாற்றுவதற்கு உதவி செய்ய வேண்டுமென இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















