மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு..
கொள்ளிடம் ஆறு வறண்டு காணப்படும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது, குடங்களை வாகனங்களில் கட்டிய படி தண்ணீருக்கு அலையும் பரிதாப நிலையில் பொதுமக்கள், தினமும் பல்வேறு இடங்களில் காலி குடங்கள் உடன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது:-
காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறான கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் அமைந்துள்ள இடம் ஆகும்.கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு ஒன்றியங்களை சார்ந்த 610 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இது போல் மயிலாடுதுறை நகருக்கு நாள் ஒன்றுக்கு 47லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையமும் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்திற்காக 32 இடங்களில் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு, அந்த தண்ணீர் கிணற்றில் சேகரிக்கப்பட்டு, ராட்சத மோட்டார்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் கொள்ளிடம் ஆற்றின் நீராதாரத்தை நம்பியே உள்ளன. இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தாலும், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையிலும் ஆறு முழுவதும் வறண்டு மணல்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய உறிஞ்சி கிணறுகள்
போதிய தண்ணீர் இன்றி குறைவாக தண்ணீர் கிடைக்கிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரில் தினமும் காலை ஒரு மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 நிமிடங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. மயிலாடுதுறையில் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வராமல் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி செல்கின்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் டேங்கர் லாரி மூலம் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்கி வரும் நிலையில், போதுமானதாக இல்லை. தண்ணீர் கிடைக்கக்கூடிய இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், குடங்களை வாகனங்களில் வைத்து, தண்ணீர் பிடித்து செல்கின்றனர். வறட்சி மாவட்டங்களில் இருப்பது போல், காவிரி டெல்டா மாவட்டத்தில் கடும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கடலோர கிராமங்களான பழையார் முதல் தரங்கம்பாடி வரை கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் இன்று பல கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்திலும் நடந்து சென்றும் குடங்களில் தண்ணீரை பிடித்து தங்களது தேவியை தினம் தினம் ஓரளவிற்கு பூர்த்தி செய்து வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தினமும் பல்வேறு இடங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது, குடிநீர் தேவைக்காக கூடுதல் தண்ணீரை மேட்டூரில் இருந்து திறந்து, கொள்ளிடம் ஆற்றில் வழங்க வேண்டும் எனவும் காவிரி ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளின் ஆங்காங்கே தடுப்பணை அமைத்தும் கைவிடப்பட்ட கிணறுகளை மீட்டெடுக்கவும் புதிய கிணறுகளை அமைக்கவும் ஆங்காங்கே உள்ள குளங்களை நன்கு தூர்வாரி குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படுத்தவும் மழைநீர் சேகரிப்பு தொட்டி வீடுகள் தோறும் அமைத்திடவும் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொண்டு வந்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













