மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி உற்சாகமாக விளையாடும் இளைஞர்கள் :-
மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு மேட்டூரில் போதிய நீர்வரத்து இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சாவடி குளம் தண்ணீர் இன்றி முழுமையாக வறண்டு காணப்படுகிறது. பரந்து விரிந்துள்ள இந்தகுளத்தில் அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் மைதானமாக மாற்றி, தினமும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். ஒருகாலத்தில் தண்ணீர் நிரம்பி விவசாயத்திற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் நீர் ஆதாரமாக இருந்த இந்த குளம், தற்போது விளையாட்டு மைதானமாக மாறியிருப்பது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், விடுமுறை நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் இளைஞர்களின் ஆர்வமும் பாராட்டைப் பெற்று வருகிறது. வறண்ட குளத்தில் இளைஞர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் காட்சி, டெல்டா மாவட்டங்களில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையின் தீவிரத்தையும், நீர்நிலைகளின் தற்போதைய நிலையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குளங்களுக்கு போதிய நீர்வரத்தை உறுதி செய்து, நீர்நிலைகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.













