திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்.
தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி அதன் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கும் வகையில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய்த்துறை அனுமதி வழங்கி வருகிறது. சீர்காழி தாலுக்கா திருவாலி கிராமத்தில் 5261 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 17 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5040 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர்வளத்துறை அனுமதி பெற்ற பிறகு வருவாய்த்துறை அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. கடந்த காலங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதை அடுத்து வியாபார நோக்கில் பலரும் அதிக அளவு மண் எடுத்ததை காரணம் காட்டி நீர்வளத்துறை தற்போது வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்தவர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் இன்று காரைமேடு சூரக்காடு கிராமத்தில் திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க மறுக்கும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் உடனடியாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- நாகை மற்றும் பூம்புகார் -இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

















