விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அறிவிப்பு
பேட்டி 1) செல்வகுமார்(மாவட்ட தலைவர் – கறிக்கோழி வியபாரிகள் சங்கம்)
விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டம் முடிந்த பின்னர் மாவட்ட தலைவர் செல்வக்குமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோழி உற்பத்தி நிறுவனங்களின் கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்னர் அரசின் தீவன கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் அதீத தீவனங்களை கொடுத்து கோழியின் கழுத்துப்பகுதியில் தங்குமாறு செய்து முறைகேடாக தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களில் கோழி கழிவுகள் நிரம்பி வழிவதோடு சுற்றுப்புற சூழலும், இதைச்சார்ந்த தொழிலாளர்களுக்கும் கேடு விளைவிப்பதாக உள்ளது. அறுவைக்கூடங்களிலும் அதீத கழிவுகளால் இறைச்சி நுகர்வோர்களுக்கு சென்றடையும்போது பாதுகாப்பற்றதாக உள்ளது. தீவனங்களை தேவைக்கு அதிகளவு கொடுப்பதன் மூலம் ரூ.20 முதல் ரூ.30 வரை பொதுமக்களுக்கு கோழி விலையில் கூடுதலாகவும், உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானமாகவும் உள்ளது. இதுபற்றி பலமுறை உற்பத்தி நிறுவனங்களை கேட்டுக்கொண்டும் அந்நிறுவனங்கள் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபற்றி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களிலும் மற்றும் தலைமை செயலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். இருப்பினும் நடவடிக்கை இல்லை.
இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு எங்கள் வியாபாரத்தை தமிழகம் முழுவதும் விற்பனையை நிறுத்தம் செய்யப்போவதாக முடிவு செய்துள்ளோம். அதன்படி வருகிற 31-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற கறிக்கோழி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் கறிக்கோழி விற்பனை கடைகள் அடைக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,500 கடைகள் அடைக்கப்படுகின்றன. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட உள்ளோம்.இதன் மூலம் நாள் ஒன்றுக்கு எங்களுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும். இருப்பினும் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் கோழிகளை வழங்கவும், குறைவான விலையில் வழங்குவதே எங்கள் நோக்கம். எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உற்பத்தி நடைமுறைகளை கடைபிடிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

















