மயிலாடுதுறை அருகே 3 வயது குழந்தையை கீழே தள்ளி கொலை செய்த குழந்தையின் தாயின் கள்ளக்காதலன்:- பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய தாயும், கொலை செய்த கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆலவேலி கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் கனிவண்ணன்(31)-கவிப்பிரியா(25)) தம்பதி. கூலித்தொழிலாளியான கனிவண்ணன் அதே தெருவை சேர்ந்த கவிப்பிரியாவை காதலித்து 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 6 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கவிப்பிரியாவுக்கு, மயிலாடுதுறையை அடுத்த அரிவேளூர் கிராமத்தைச் சேர்ந்த, தனியார் நுண்கடன் நிதி நிறுவனத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு பணம் வசூல் செய்யும் பணியில் இருந்த அபினேஷ்(30) என்பவருடன், குழுக்கடன் வசூல் செய்ய செல்லும்பொழுது திருமணத்திற்கு முன்பு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிப்பிரியாவின் திருமணத்துக்கு பிறகு அபினேஷ் உடனான நட்பு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதையறிந்த கணிவண்ணனுக்கும் கவிப்பிரியாவிற்கும் ஏற்பட்ட பிரச்னையில், கவிப்பிரியா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து ஆக்கூர் பாரதி வீதியில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அங்கு அபினேசுடன் கள்ளக்காதல் தொடர்ந்த நிலையில், கடந்த மாதம் (ஜூன் 25) தனது 3 வயது இளைய மகன் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்ததாக கவிப்பிரியா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தொடர்ந்து மூன்று வயது குழந்தை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக கவிப்பிரியாவின் கணவர் கனிவண்ணன் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, 30-ஆம் தேதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து தாய் கவிப்பிரியாவையும் கள்ளக்காதலன் அபினேஷையும் பிடித்த செம்பனார்கோவில் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பவத்தின்போது தான் ஊரிலேயே இல்லை, வெளியூரில் இருந்தேன் என்று போலீசாரிடம் அபினேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் சம்பவத்தின் போது அபினேஷ் கவிப்பிரியா வீட்டில் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கவிப்பிரியா கீழே தண்ணீர் எடுக்க சென்றபோது 3வயது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்ததால் ஆத்திரமடைந்த அபினேஷ் குழந்தையை கீழே பிடித்து தள்ளி சுவற்றில் மோதியதில் தலையில் அடிபட்டதாக தெரிவித்துள்ளார். இதனை மறைத்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக இருவரும் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கவிப்பிரியா மற்றும் அபினேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கவிப்பிரியாவை திருச்சி பெண்கள் சிறையிலும், அபினேஷை கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.













