மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருடன் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. சந்திப்பு:- காவல்துறை நடுநிலையுடன் செயல்படவும், அப்பகுதி மக்களிடையே நிரந்தர பகை ஏற்படாத வகையில், எந்தவித சமூகப் பதற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த சாத்தங்குடி கிராமத்தில் பார்த்திபன் என்கிற இளைஞரும், அவர் காதலித்த பெண்ணும் ஒரே இடத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அது ஆணவக்கொலை என இளைஞரின் பெற்றோர்; புகார் எழுப்பியுள்ளனர். பார்த்திபனை சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அதற்கு முதல்நாள் தாக்கியுள்ளனர். அது தொடர்பாக காவல்துறையிலே புகார் அளிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் அடிப்படையில், உண்மை என்ன வெளிவருகிறதோ, அதன் அடிப்படையிலே வழக்கை மாற்றுகிறோம் என காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலே எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல் இந்த வழக்கை விசாரித்து, உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
அந்த இடத்துக்கு சென்று பெற்றோரை சந்தித்தேன். சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும் நான் பார்வையிட்டேன். அங்கே இருக்கிற நிலையை நேரிலே கண்டறிந்து, இப்போது மாவட்ட ஆட்சியரிடத்திலும் அது தொடர்பாக பேசியிருக்கிறேன். இந்த வழக்கு ஏற்கெனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பெற்றோருக்கு நிவாரணமும் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தச் சட்டத்தின் அடிப்படையிலே அந்த இளைஞரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குக் குடியிருக்க இடம் வழங்கப்பட வேண்டும். இவற்றை நிச்சயம் செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர்; உறுதியளித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நிரந்தர பகையை ஏற்படுத்திடாத வாகையில், எந்தவித சமூகப் பதற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் பகுதி மட்டுமின்றி, பல இடங்களிலுமே தாட்கோ கடன்கள் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். இதுதொடர்பாக துறை அமைச்சர் வன்னியரசுவிடம் எடுத்துக் கூறுவதாகக் கூறியிருக்கின்றேன்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. தமிழக முதலமைச்சர் மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கித் தர வேண்டும். இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த உள்ளேன். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் நூலகத்துக்கு, நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. இதுகுறித்து, நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைக்க உள்ளேன் என்றார்.













