மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தமிழ்நாடு நுகர்பொரு வாணிபக் கழக அதிகாரிகளை வெளுத்து வாங்கிய விவசாயிகள்-எந்த டிபிசியில் 40 ரூபாய் கூடுதலாக வாங்கவில்லை என நீங்கள் கூறுங்கள் அங்கு நாங்கள் நெல்லை ஒப்படைக்கிறோம் என விவசாயிகள் சவால்..
திருவாரூருக்கு வந்து விவசாயிகளை மாற்று பயிர் செய்ய அறிவுறுத்தும் அமைச்சரே அனைவருக்கும் உணவளிக்கும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருக்கிறது. ஆனால் மதுபானம் கிடங்குகளில் இருக்கிறது தெரியுமா…? என திருவாரூர் விவசாயிகள் ஆவேசம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதத்திற்கான விவசாய குறைதீர் கூட்டம் கடந்த மாதத்தில் நடைபெறவில்லை. மூன்று முறை ஒத்திவைப்புக்கு பிறகு ஜூன் மாத விவசாய குறைதீர்கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
முதலில் ஜூன் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கூட்டம் பின்னர் ஜூலை மூன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக ஜூலை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் இன்று நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு நிரம்பி வழிந்தது. விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அமர்வதற்கு இடம் இல்லாமல் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த சூழல் நிலவியது.
தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாய குறைதீர்கூட்டம் தொடங்கியது. கூட்டத் தொடக்கத்திலேயே விவசாயிகள் தமிழக அரசு முழுமையாக பயிர் கடனகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உளள பத்து வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
அப்போது விவசாயிகள் பேசியதாவது…
விவசாயிகளை அவமதிக்கின்ற மன்னார்குடி வேளாண் பொறியியல் துறையை மாவட்ட ஆட்சியர் கண்டிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்படாமல் உள்ளதால், முப்போகம் விளைவிக்கக் கூடிய மன்னார்குடி போன்ற பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல்பட்டு வருகிறது.
மன்னார்குடி பகுதியில் புதிதாக போடப்பட்ட சுற்றுசாலையில் உயிர் அழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குவதால் உயிர் அபாயம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மின்வாரியத்தினரிடம் விளக்கம் கேட்ட போதும், மின்வாரிய அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனால் கடுப்பான கலெக்டர், அரசு துறைகளுக்கு இடையான, ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறை காரணமாக ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நடைபெற கடாது என அதிகாரிகளை எச்சரித்தார். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார. 15 நாட்களுக்குள் பிரச்சனையை சரி செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய விவசாயிகள் கூறும்போது…
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் வந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது விவசாயிகள் மாற்றுப் பயிரை பயிரிட அறிவுறுத்தினார். இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இந்த வார்த்தை விவசாயிகளை புண்படுத்தி உள்ளது. தண்ணீர் இல்லாமல் மாற்று பயிர் செய்ய சொன்னால் எப்படி செய்வது..? அனைவருக்கும் உணவு அளிக்கும் விவசாயி வழங்கும் நெல்லுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மதுப் புட்டிகளுக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மது பாட்டில்கள் மது குடோனில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வெயிலில் காய்ந்து ,மலையிலும் நனைந்து வீணாகின்றன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டிய நிலையில் நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். உடனடியாக வெகுண்டெழுந்த விவசாயிகள், எந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு பணம் வாங்கவில்லை என்று நீங்கள் கூறுங்கள். அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாங்கள் நெல்லை ஒப்படைக்கிறோம் என்றனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து வேளாண்மை அதிகாரிகளும் மௌனம் மட்டுமே சாதித்தனர். இதனால் அங்கிருந்த விவசாயிகள் சினிமா பட டயலாக் போல.,, வாய்ப்பில்லை ராசா என தங்களுக்குள்ளே கூறிக் கொண்டதால் அங்கு சிரிப்பலை எழுந்தது..
தொடர்ந்து விவசாயிகள் பேசும் போது…
தற்போது அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் ஏன் இல்லை என கேள்வி எழுப்பினர். சிசிடிவி கேமராக்கள் இருந்தால் யார் பணம் வாங்குகிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக தெரியும் என விவசாயிகள் அடுக்கடுக்காக அதிகாரிகளை நோக்கி கேள்விகளை எழுப்பினர்.
இதனால் விவசாய குறைதீர் கூட்டமே ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது. ஒரு கட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அனைத்து அதிகாரிகளும் அமைதியாகவே இருந்தனர்.
மேலும் பேசிய விவசாயிகள் கூறும்போது..
தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகம் சீராக இருப்பதில்லை. பல இடங்களில் மின்வெட்டு நிகழ்கிறது. இது தொடர்பாக மின்வாரியம் அறிவித்த எண்ணில் புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியிருந்தனர்.
மின்வாரிய புகார் எண்ணில் வோல்டேஜ் குறைவாக இருப்பதாக புகார் அளித்த நிலையில், அது தொடர்பாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் வோல்டேஜை சரிபார்க்கும் மோட்டார் உள்ளிட்ட எந்தவித கருவிகளும் எடுத்து வராமல் சம்பவ இடத்துக்கு வந்து பெயரளவுக்கு ஆய்வு செய்து விட்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு பெயருக்கு வேலை செய்யும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் நடக்க வேண்டிய மாதாந்திர குறைதீர்கூட்டம் கடந்த மாதம் நடைபெறாததால், கடும் அதிருப்தியில் இருந்த விவசாயிகள் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
விவசாயிகளின் அடுக்கடுக்கான கேள்விகளால் அதிர்ந்து போன அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் மௌனம் காத்தது அதிகாரிகளின் இயலாமையை காட்டுகிறது.













