விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்: ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தீர்மானம்.
விழுப்புரம், ஜூன் 28:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் நெப்போலியன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு பேருரையை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அமிர்தக்குமார் வழங்கினார். தொடர்ந்து மாநில துணைத் தலைவர் ஜெயபால், மாநில அமைப்புச் செயலாளர் முரளி, மாநில செயலாளர் செங்கேணி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூவழகன், கடலூர் மாவட்டத் தலைவர் முருகபாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் தெஸ்ணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக மாநிலப் பொருளாளர் செல்வகுமார் நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்கள் உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் மட்டும் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட்டுள்ள நிலையில், இதர சுமார் 16 பணியிடங்கள் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன. இப்பணியாளர்கள் வருவாய்த் துறை, காவல்துறை, நீதித்துறை, மருத்துவத் துறை, கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டபடி ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

















