நெல் உலர்த்தும் களம் அருகே திடக்கழிவு மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவை சார்ந்த கிராமம் கரையாப்பலூர். இந்த கிராமத்தில் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கரையாப்பலூர் ஊராட்சியில் மட்டுமே சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ள திடக்கழிவு மற்றும் மலக்கசடுகளை சுத்திகரிப்பதற்காக, சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றை உருவாக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக கரையாப்பலூர் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவுக்கு கரையாப்பலூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் இருப்பதாலும், சுத்திகரிப்பு நிலையம் அமைவதாக உள்ள இடத்திற்கு அருகில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடுகாடுகள் உள்ளதாகவும், அந்த பகுதியில் விவசாயிகள் நெல்மணிகளை காய வைக்கும் களம் உள்ளதாகவும், மேலும் அந்தப் பகுதி மற்றும் அந்த பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் ஆடும் மாடு மேய்க்கும் இடமாக இருப்பதாலும் இந்த இடத்தில் சுத்தகரிப்பு நிலையத்தை அமைக்க கூடாது என கூறி கரையாப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து குடவாசல் வட்டாட்சியரிடம் கேட்ட பொழுது அங்கு எந்தவித முன் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இடம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த பிரச்சனை குறித்த முடிவை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.

















