தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்
தமிழக வெற்றி கழகம் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணியினர் ஆர்பாட்டம் நடத்தி குவிந்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி எஸ் சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் அமுத அரசன், மாணவர் அணி நிர்வாகிகள் முரளி சேனா, தியாகராஜன் வெற்றி என்கிற ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு. ரவிச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் பொன் பாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வது, குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையை பொடியாக்கியதாக உண்மைக்கு புரம்பான விளக்கம் அளித்திருந்த அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த மாணவரணியினர் திருவள்ளூர் இரயில் நிலையம் அருகே இன்று திரளாக கூடியிருந்த நிலையில் காவல்துணை கண்காணிப்பாளர் கலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்பாட்டத்திற்காக மேடை போடுவதற்கு தடை விதித்தனர் . தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்திய மாணவரணியினரை வலுக்கட்டாயமாகி அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டுமென கூறிய நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதோடு, பேரணியாக செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கே. திராவிட பக்தன், ஆர்டிஇ ஆதிசேஷன், பன்னீர்செல்வம், சரஸ்வதி சந்திரசேகர், கே. சுரேஷ் குமார், மா.கிரண், டி. கே. பாபு, புவனேஷ் குமார், டி.ஆர். திலீபன், மோ.ரமேஷ், மகாலிங்கம், தா.மோதிலால், கூளூர் ராஜேந்திரன், கே.அரிகிருஷ்ணன், பிரகாஷ் என்கிற ஞான ஒளி மற்றும் பிரபாகரன், லிங்கேஷ்குமார், டில்லி பாபு, ஆ.விக்னேஷ் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

















