திருவள்ளூரில் நடைபெற்ற விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில் விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா தலைமையில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம நடைபெற்றது. கூட்டம் ஆரம்பிக்கும் போதே விவசாயிகள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் அறிவித்த விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் ஆட்சியர் கவிதா சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என கூறியதையடுத்து மீண்டும் இருக்கைகளில் அமர்ந்து கூட்டம் தொடங்கியது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், எதிர்கட்சியின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கூறுவது தவறு எனவும், யாருடைய தூண்டுதலும் இதில் இல்லை எனவும், அரசு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.













