நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை – எஸ்.பி நேரில் விசாரணை
நாகையில் அடுத்தடுத்த இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்
நாகை ரயில் நிலையம் அக்கரைப்பேட்டை மேம்பாலம் கீழ்புறம், நெல் ஏற்றும் தண்டவாளம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் அருண் (38) ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வந்த அருண், மீன்பிடி தடைக்காலம் என்பதால் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்த நிலையில், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் நாகை ரயில் நிலையத்தில் உள்ள நெல் ஏற்றுமதி பண்ணும் சரக்கு ரயில் நிற்கும் இடத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது, இதில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதேபோல்
நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கீழ்வேளூரைச் சேர்ந்த சித்ரா (40) என்ற பெண் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.
திருமணமாகி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சித்ரா, நாகை, நாகூர் பேருந்து நிலையங்களில் சுற்றித் திரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இந்த நிலையில் மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு ரத்தம் காணப்பட்டதால் அங்கு தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒரே நாளில் இரு கொலைகள் நடந்ததையடுத்து எஸ்.பி சுஜித் குமார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ரயில்வே மற்றும் நகர போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலை சம்பவம் நாகை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.














