திண்டுக்கல் மாநகரின் மையப்பகுதியான மணிக்கூண்டு அருகே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் பாரதி முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு கூட்டத்தில், கழகப் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் பங்கேற்று ஆற்றிய உரையில், தற்போதைய அரசியல் சூழலைச் சாடிப் பல்வேறு அதிரடி கருத்துகளை முன்வைத்தார். “புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்று நம்மோடு இருந்திருந்தால் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்திருப்பார். ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர் கொண்டு வந்த ‘தாலிக்குத் தங்கம்’ வழங்கும் உன்னதத் திட்டத்தை, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முடக்கிவிட்டது. அம்மா மற்றும் எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு இன்று சவரனுக்கு 1.25 லட்சத்தைத் தொட்டுள்ளது. அந்தத் தங்கத்தை விற்றாலே ஒரு குடும்பத்தின் வறுமையைப் போக்கிவிட முடியும் என்ற நிலையில், அத்திட்டத்தை நிறுத்திய தி.மு.க.வினரைத் தாய்மார்கள் கேள்வி கேட்க வேண்டும்” எனச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், கல்வித் துறையில் அண்ணா தி.மு.க.வின் சாதனைகளை வரிசைப்படுத்தினார். “கழக ஆட்சியில் 55 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் (Laptop) வழங்கப்பட்டன. ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளாக மவுனம் காத்த தி.மு.க. அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில், 18 வயது பூர்த்தியான மாணவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற சுயநலக் கணக்கோடு, ஆட்சி முடிய இரண்டு மாதங்களே உள்ள நிலையில் மடிக்கணினி வழங்குகிறது. இது சாகப் போகிற நேரத்தில் ‘சங்கரா சங்கரா’ என்பது போல உள்ளது” என்று எள்ளி நகையாடினார். மேலும், தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டித்த அவர், புரட்சித்தலைவி அம்மா இருந்திருந்தால் இத்தகைய சமூக விரோதிகளைக் கருவிலேயே அறுத்திருப்பார் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ்.ராஜமோகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். “வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் கழகத்தின் வெற்றித் திருநாளாக அமையும்; சாதாரணக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்த எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலரும்; அப்போது தமிழகத்தைச் சூழ்ந்துள்ள சனி விலகும்” என்று பேராசிரியர் கல்யாண சுந்தரம் தனது உரையை நிறைவு செய்தார்.

















