மேமாத்தூர் கிராமத்தில் இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் கேட்டு தொந்தரவு அளித்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் (மீனியல்) மீது வழக்குப்பதிவு. கிராம நிர்வாக அலுவலரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ்(32). கடந்த மாதம் டிட்வா புயல் மழையின் போது இவரது பசுமாடு இறந்துள்ளது. இதற்காக அரசு நிவாரணத்திற்கு பிரகாஷ் விண்ணப்பித்துள்ளார். மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் பரிந்துரை செய்ததன் பேரில் நிவாரணத்தொகை ரூபாய் 30,000 விவசாயி பிரகாஷ் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் பெற பரிந்துரைத்ததற்காக கிராம நிர்வாக அலுவலரின் பெண் உதவியாளர்( மீனியல் ) , விவசாயி பிரகாஷின் வீட்டிற்கு சென்று ஐயாயிரம் லஞ்சம் கேட்டு தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. 3000 ரூபாய் தருவதாக கூறிய பிரகாஷ் இது குறித்து மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமையவரம்பன் தலைமையில் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் அருள்பிரியா மற்றும் போலீசார் அறிவுறுத்தல்படி பிரகாஷ் மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கு மீனியல் பாஸ்கரணி இல்லாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய 3 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். உடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் கலவுமாக பணத்தைப் பெற்ற ஜெயபிரகாஷ்சை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் கணக்கு வழக்கு ஆவணங்களை சரிபார்த்து ஆதாரங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் பெண் மீனியல் பாஸ்கரணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். . இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















