சென்னை: தமிழ் சினிமாவின் மைல் கல்லான இயக்குனர் பாரதிராஜாவை கௌரவிக்கும் நிகழ்வை, இயக்குனர் வெற்றிமாறன் தலைமையிலான International Institute of Film and Culture நிறுவனம் நடத்த இருக்கிறது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தகவலியல் துறையுடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, ‘தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா’ என்ற தலைப்பில் நவம்பர் 7ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை ஐந்து நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பாரதிராஜாவின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் — ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கிழக்கு சீமையிலே’ — திரையிடப்படவுள்ளன.
திரைப்படங்களின் திரையிடலுடன், அவற்றில் பணியாற்றிய கலைஞர்களும் கலந்து கொண்டு, பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர். மேலும், விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் இயக்குநர் வெற்றிமாறனும் பங்கேற்கிறார்.
இயக்குனர் அமீர், நடிகர் சத்யராஜ், ‘கடலோரக் கவிதைகள்’ நாயகி ரேகா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, சேரன் உள்ளிட்ட பலரும் இந்த சிறப்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
முன்னதாக, இந்திய திரை நாயகன் பாலு மகேந்திராவை கௌரவிக்கும் நிகழ்வை IIFC நிறுவனம் நடத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது பாரதிராஜாவுக்காக வெற்றிமாறன் நடத்தும் இந்த விழா, தமிழ் சினிமாவை கொண்டாடும் ஒரு முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.

















