கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா திருக்கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்- பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:ஆவணி முதல் ஞாயிற்றுகிழமையை யொட்டி, நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் நாகதோஷத்தை தீர்க்கும் முக்கிய தலங்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜ கோயில். ஜாதக அடிப்படையில் ராகு, கேது தோஷம், திருமண தடை, குழந்தை பேறு இன்மை ஆகியன காரணமாக பாதிக்கபடுவோருக்கு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனம் செய்தால் கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் ஞாயிறு தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுகிழமைகளில் நாகராஜாவிற்கு பால் வார்ப்பது புனிதமாக கருதபடுகிறது. அதிலும் ஆவணி ஞாயிற்றுகிழமை கோயிலில் வழிபாடு நடத்தினால் மிகவும் சிறப்பானதாக கருதபடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் இன்று முதல் ஆவணி ஞாயிற்றுகிழமை ஆகும். நாகராஜா கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்க பட்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடந்தது. மேலும் கோயில் சுற்று பிரகாரம் பகுதியில் உள்ள சிவன், பாலமுருகன், சாஸ்தா, உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில், பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருகை புரிந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளா பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருமணம் கைகூடவும், குடும்ப கஷ்டங்கள் தீரவும் காணிக்கை செலுத்தி நாகராஜாவை வணங்கி சென்றனர். மேலும் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் வார்த்தும், மஞ்சள், உப்பு போன்றவை வாங்கி தங்கள் நேர்ச்சை கடன் செய்தனர்.ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீர்மோர் வழங்கப்படுவது வழக்கம் .அந்த வகையில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை இன்று நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இதனை தமிழக வெற்றிக்கழக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவன் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், நாகராஜா கோவில் கண்காணிப்பாளர் ஜெயசுதா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் டவுன் கிளை தலைவர் ஜோதி குமார் செயலாளர் முருகன் பொருளாளர் ஐயப்பன் துணை செயலாளர் சந்திரகாசன் துணைத் தலைவர் கணேசன் மற்றும் உறுப்பினர் சிவராமன் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்















