மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு, மதிமுக கொடி கட்டிய காரில் வந்த சட்டமன்ற உறுப்பினர், மதிமுகவில் தொடர்கிறீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என்று மழுப்பலாக பதில் அளித்தார்:-
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் நான்கு இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த செந்தில்செல்வன் உள்ளிட்ட இருவர் வெற்றி பெற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பே மதிமுகவின் உயர்நிலைக் கூட்டத்தில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மதிமுக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியது இல்லை என்று சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பதில் அளித்து இருந்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற வேளாண் துறை கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வருகை தந்த செந்தில் செல்வன், மதிமுக கொடி கட்டிய காரில் வந்து இறங்கினார். இதுகுறித்து அவரிடம் நீங்கள் மதிமுகவில் தொடர்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நான் மக்கள் பணி செய்ய உள்ளேன், மக்களுக்கு தொடர்ந்து கடமை ஆற்றுவேன் என்று பதில் அளித்து சென்றார்.














