மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் வட்டிக்கு பணம் வாங்கிய தகறாறில் பணம் கொடுத்த குடும்பத்தினர் வெல்டிங் தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்ததாக குற்றசாட்டு. காவல்நிலையத்தில் விசாரணை செய்யப்பட்ட நிலையில் சம்பவம். கடன் வாங்கியவரை உருட்டுகட்டையால் அடித்து கொன்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்து மயிலாடுதுறை போலீஸார் விசாரணை:-
மயிலாடுதுறை நல்லத்துக்குடி கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி கோபிநாத்(46). இவர் நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரை அடுத்த சின்னையா நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி மோனிகா என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில், பணத்தை திரும்பக் கேட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கோபிநாத் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மோனிகா, மோனிகாவின் சகோதரர் வைரமுத்து, மோனிகாவின் தாயார் உஷாநந்தினி ஆகியோர் கோபிநாத்தின் மனைவி சத்யா, மகன்கள் கோகுலவாசன், சபரி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டுக்கு வந்த கோபிநாத் சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் தனது குடும்பத்தாரிடம் வாக்குவாதம் செய்ததைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, அங்கே கிடந்த உருட்டுக்கட்டையால் கோபிநாத்தின் தலையில் அடித்துள்ளார். இந்த தகராறை தடுத்த கோபிநாத்தின் மகன் கோகுலவாசனின் கையில் கம்பியால் அடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயம் அடைந்த கோபிநாத் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கோபிநாத்தின் உடல் பிரேத பரிசோதனைக் கூடத்தில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டது. மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று சுந்தரமூர்த்தி, மோனிகா, வைரமுத்து, உஷாநந்தினி ஆகிய நால்வரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே, சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரியும் கோபிநாத் தரப்பினர் மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 பேரை வலுக்கட்டாயமாக போலீசார் கைத செய்தனர். இதையடுத்து, மற்றவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபிநாத்தின் மனைவி சத்யா தங்களிடம் ரூ.6 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பத் தரவில்லை என மோனிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே கடந்த மாதம் 20-ஆம் தேதி கோபிநாத்தின் மனைவி சத்யா, தான் 40,000 மட்டுமே பணம் பெற்றதாகவும், அதற்கு ஈடாக தலா ரூ.20,000 வீதம் 2 காசோலைகளை கொடுத்துள்ளதாகவும், பின்னர் அந்த தொகையை ரொக்கமாக திரும்பச் செலுத்திவிட்டபோதும், மோனிகா காசோலைகள் மற்றும் ஈட்டுறுதி பத்திரத்தை திரும்பத் தரவில்லை, இது காசோலை மோசடி புகார் என்பதால், இப்பிரச்னையை நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்கிறேன் என மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

















