சென்னை : நடிகர் விஜயை விமர்சித்ததாக பரவும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “முழு உரையை கேட்காமல் அரைகுறை அரைவேக்காடுகள் கூறும் கருத்துகள் நாகரீக அரசியலுக்கு இடமல்ல” எனக் கூறியுள்ளார்.
தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவும் விமர்சனங்களை எதிர்த்து செய்தியாளர்களிடம் பதிலளித்த வேல்முருகன், “ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் பேசிய எனது உரையில் நடிகர் விஜயை ஒரே ஒரு வார்த்தையிலும் விமர்சிக்கவில்லை. பெற்றோர் தங்களின் குழந்தைகளை சினிமா பிரபலங்களுடன் மிகுந்த நெருக்கத்தில் இருக்க விடக்கூடாது என்பதே என் கருத்து. அதை வைத்து சிலர் சிதைத்து பேசுவது தவறு” என்றார்.
பாமக – தமிழர் வாழ்வுரிமை கட்சி உறவு :
பாமகவில் ஏற்பட்டுள்ள உள்ளக கருத்து முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த வேல்முருகன், “25 ஆண்டுகளாக பாமகவுக்காக உழைத்தோம். ராமதாஸ்தான் எங்களை வழிநடத்தினார். பாமகவின் குழப்பங்கள் தீர வேண்டும் என்று விரும்புகிறோம். அதே நேரத்தில், பாமகவில் இணைய போவதில்லை என்பதும் உறுதி” என்று தெரிவித்தார்.
தற்போது பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் அன்புமணி – ராமதாஸ் இடையிலான மனவருத்தம் குறித்து பேசும் போது, “அன்புமணி என்னை அணுகி பழைய கசப்பை மறந்து நண்பர்களாக பேசலாம் என்றார். அது நிம்மதியளிக்கிறது. அந்த நிம்மதியின் காரணமாக, அரசியல் விமர்சனங்களில் எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்றார்.
விஜய் தொடர்பான கருத்துகள் :
தான் நடிகர் விஜயைப் பற்றி விமர்சிக்கவில்லை என்பதையும், “விஜயை காமராசருடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல” என்ற கருத்தையும் வலியுறுத்திய வேல்முருகன், “விஜய் அரசியலில் நுழைவதைப் பற்றிய என் கருத்தை ஒரு பரந்த அரசியல் பார்வையில் தெரிவித்தேன். ஆனால் அதை சுருக்கமாகக் கொண்டு மன்னிப்பு கேட்க சொல்லும் பிரச்சாரம் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
“நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா ?”
“விஜய் மீது நான் எந்த தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை. எனவே யாருக்கும் என் மீது இந்த அளவுக்கு கேள்வி எழுப்ப உரிமை இல்லை. அரசியலில் 40 வருட அனுபவம் உள்ள எனது பேச்சை, நேற்று பெய்த மழையில் இன்று வந்த காளான்கள் விமர்சிக்கவேண்டாம்,” எனக் கடுமையாக சாடிய வேல்முருகன், “மன்னிப்பு கேட்க வேண்டுமா என யாரும் வலியுறுத்தக்கூடாது” எனத் தெளிவுபடுத்தினார்.