மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, “காலநிலை நெருக்கடி” என்ற தலைப்பில் சிறப்பு அறிவியல் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என 120-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய வக்கு வாரியக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டி மதுரை கிளைத் தலைவருமான பேராசிரியர் அப்துல்காதர், தற்போதைய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மிகவும் எச்சரிக்கையான கருத்துகளை முன்வைத்தார். தொழிற் புரட்சிக்குப் பிறகு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் பூமியின் வெப்பநிலையை உயர்த்தி இயற்கையின் சமநிலையை முற்றிலும் சீர்குலைத்துள்ளன என்று அவர் வேதனை தெரிவித்தார். குறிப்பாக, மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து, அதன் பின்னர் நீண்ட வறட்சி ஏற்படுவது வெறும் ‘காலநிலை மாற்றம்’ அல்ல, அது ‘காலநிலை நெருக்கடி’ எனும் ஆபத்தான நிலை என்று அவர் எச்சரித்தார். பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து கடலோர நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாம் இயற்கையை மதிக்கத் தவறினால், இன்று குடிநீரைப் பாட்டிலில் சுமந்து செல்வது போல், எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் ஆக்சிஜனை சிலிண்டர்களில் முதுகில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்படும் என்று அதிரடியான கருத்தைப் பதிவு செய்தார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியின் மாநிலச் செயலாளர் முனைவர் யோகராஜன் பேசுகையில், கோப்பர்நிக்கஸ், சர் சி.வி.ராமன், ராமானுஜன் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் சாதனைகளை எடுத்துரைத்தார். குறிப்பாக சர் சி.வி.ராமன் கண்டறிந்த ‘ராமன் விளைவு’ உலகிற்கு வழங்கப்பட்ட தினமே தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவத்தையும் அதன் பின்னணியையும் மாணவர்களுக்கு விளக்கினார். முன்னதாக, முதல்வர் தேன்மொழி தனது தலைமை உரையில், மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திச் சிறந்த வல்லுநர்களாக உருவாக வேண்டும் என அறிவுறுத்தினார். பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டி நிர்வாகிகள் ஹில்டா மேரி, பேராசிரியர் காயத்ரி மற்றும் செல்வராணி ஆகியோர் தங்களது அறிவியல் கருத்துரைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாணவர்கள் ஆகாஷ், சஞ்சீவ் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பி.எஸ்.எஸ். செயற்குழு உறுப்பினர் பாரதி மற்றும் கல்லூரி அலுவலர்கள் இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

















