ஓசூர்: வன்கொடுமை சம்பவங்களை விசாரிக்க தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் இத்தகைய ஸ்டேஷன்கள் தேவை,” என தெரிவித்தார்.
அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தேரோட்டம் ஒன்றின் போது, சிலர் ஒரு சமூகத்தை குறைத்துப் பேசிச் தாக்கிய சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த திருமாவளவன், “இந்த அநீதிக்கு எதிராக வரும் 13ம் தேதி மதியம் 3 மணிக்கு புதுக்கோட்டையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்றார்.
மேலும், கோவில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் நோக்கில், “திருச்சியில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற மக்கள் எழுச்சி பேரணி வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது,” என்றும் கூறினார்.
பேரணிகள் குறித்த போலீசாரின் அனுமதி தொடர்பாக, “எந்த கட்சி பேரணி நடத்தினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது வன்னியர் சங்க பேரணிக்கும் உண்டு. போலீசாரின் நடைமுறை இப்படி இருப்பதாகவே பார்க்க வேண்டும்” என்றார்.
“’காலனி’ என்ற சொல் ஒரு சமூகத்தை குறிக்கும் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதுபோல, பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும்,” என்றார்.
வரும் சட்டசபைத் தேர்தல் குறித்து பேசும் அவர், “எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது கட்சியின் முடிவுப்படி நடைபெறும். அங்கீகாரத்தை தக்கவைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
போர் தாக்குதலுக்கு வரவேற்பு !
ஜம்மு – காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து, “இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்,” என்றார் திருமாவளவன்.
“ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பங்கேற்கும் பேரணியையும் அறிவித்துள்ளார். இதையும் வரவேற்கிறோம்,” எனவும் கூறினார்.