சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகம் மேலமருதாந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தர் மகன் சார்லஸ் என்கிற சரண்ராஜ் (வயது 42). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், இவரது பெயர் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி புத்தாகரம் சாலையில் கையில் வீச்சருவாளை வைத்துக்கொண்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் மணல்மேடு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, கையில் வீச்சருவாளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருந்த சரண்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்த வீச்சருவாளை கைப்பற்றிய போலீசார், வழக்குபதிவு செய்து சரண்ராஜை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். தொடர்ந்து சரண்ராஜ் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிநேகா ப்ரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், சரண்ராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி மற்றும் போலீசார் சரண்ராஜை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.













