திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணைப்பட்டி கோம்பை வனப்பகுதியில், பொதுமக்களின் நீர் ஆதாரத்தை முடக்கி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் வனத்துறையின் அதிரடி நடவடிக்கையால் முடிவுக்கு வந்துள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த குணசீலன் என்பவர், வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது பட்டா நிலத்தின் வழியாக வரும் ஓடை நீரை மறித்து, எவ்வித அனுமதியுமின்றி சுமார் ஒரு லட்சம் கனஅடி கொள்ளளவு கொண்ட இரண்டு ராட்சத நீர்த்தேக்க அணைகளைக் கட்டியிருந்தார். கடந்த பல ஆண்டுகளாகத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காகப் பொதுமக்களுக்குச் சேர வேண்டிய தண்ணீரைச் சட்டவிரோதமாகத் தேக்கி வைத்திருந்த அவர், இது குறித்துக் கேள்வி எழுப்பிய அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், “இது எனது சொந்த இடம், யாரும் கேள்வி கேட்க முடியாது” எனக் கூறி தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
மக்களின் நீண்டகாலப் புகாரைத் தொடர்ந்து, வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், குணசீலன் தனது பட்டா நிலத்தை மீறி அரசு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து இந்த அணைகளைக் கட்டியிருப்பது ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது நிலத்திற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வனத்துறை சார்பில் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், உரிய ஆவணங்களை அவரால் சமர்ப்பிக்க முடியாத நிலையில், சட்டவிதிகளின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத்துறை அதிரடி முடிவெடுத்தது.
நேற்று வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த இரண்டு நீர்த்தேக்க அணைகளையும் உடைத்துத் தகர்த்தனர். இதன் மூலம் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் விடுவிக்கப்பட்டு, கீழே உள்ள கோம்பை அணைக்கு மக்கள் பயன்பாட்டிற்காக வந்து சேரும்படி வழிவகை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்டகாலத் தண்ணீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் பிரச்சினைக்குத் துணிச்சலாக முற்றுப்புள்ளி வைத்த வனத்துறையினருக்கு, கன்னிவாடி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.














