தரங்கம்பாடி அருகேசாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் நேற்று காதலி உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில்,
இன்று காதலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மூன்று மாவட்டத்தைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும் சாத்தங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி சாத்தங்குடியில் கொட்டகை ஒன்றில் தூக்கிட்ட நிலையில் காதலர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்தனர். பெண் வீட்டார் ஆணவ படுகொலை செய்து விட்டதாக பார்த்திபன் குடும்பத்தினர், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு மயிலாடுதுறையில் பெண் வீட்டாரால் தகனம் செய்யப்பட்டது.
காதலன் பார்த்திபன் உடலை பெறாமல் போராட்டம் நடத்தியவர்களிடம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் உத்தரவாதம் அளித்தனர். மேலும் பிரேத பரிசோதனை முதல் நிலை அறிக்கை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை அரசு வேலை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வருவாய்த் துறையினர் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்த்திபனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. அங்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர் பார்த்திபன் உடல் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குட்டியாண்டியூர் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.














