உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்க வலியுறுத்தி தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்- நகரில் குப்பை அள்ளப்படாமல் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் தேங்கும் குப்பைகள் 75 ஒப்பந்த தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்றப்படுகிறது. மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 540 சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 100 சம்பளம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான அரசாணை ஜூலை 15ஆம் தேதியே சீர்காழி நகராட்சி நிர்வாகத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட ரூ 640 சம்பளத்தை நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் தூய்மை பணிகளை மேற்கொள்ளாமல் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகர் முழுவதும் தூய்மை பணி செய்யப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி நகராட்சி பொறுப்பு கமிஷனர் சசிகலா, சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வுக்கான ஆணை கடந்த மாதம் 15 ஆம் தேதியே கிடைத்துள்ளது. மண்டல நிர்வாக இயக்குனரின் அனுமதி பெற்று உயர்த்தப்பட்ட சம்பளம் நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் என தெரிவித்தனர் ஆனால் அதனை ஏற்காத ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது













