மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கிய நிலையில், பகல் பொழுதில் கடுமையான வெப்பம் வாட்டி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பிற்பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். வயல்வெளிகளில் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் கோடை வெப்பம் காரணமாக கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆர்வலர்கள் கணிப்பு வெளியிட்டிருந்தனர் அதேபோல் இன்று பிற்பகல் திடீரென்று பலமான காற்றுடன் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.














