தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள பாரத் மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இந்தியத் திருநாட்டின் மாபெரும் வழிகாட்டியான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு “தேசிய இளைஞர் எழுச்சி தின விழா” மிக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. வருங்காலத் தூண்களான மாணவர்களிடையே தன்னம்பிக்கையையும், தேசப்பற்றையும் விதைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பாரத் கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் மற்றும் தலைமை ஆசிரியர் செல்வ லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
விழாவானது முறைப்படி இறைவணக்கப் பாடலுடன் தொடங்கியது. மாணவி உமாமதி நிகழ்ச்சிகளைத் திறம்படத் தொகுத்து வழங்க, மாணவி அருணலோஷினி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவின் முக்கிய ஈர்ப்பாக, மாணவன் ரவீன் சுவாமி விவேகானந்தர் போன்றே தத்ரூபமாக வேடமணிந்து மேடையில் தோன்றியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. அவரைத் தொடர்ந்து மாணவி பாரதி, சுவாமி விவேகானந்தர் உலகிற்கு வழங்கிய உன்னதக் கருத்துக்களையும், இந்திய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய அறநெறிகள் குறித்தும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியை மத்திய அரசு தேசிய இளைஞர் தினமாக அறிவித்துள்ளதன் பின்னணி குறித்தும், அதன் அவசியத்தையும் மாணவி ஸ்ரீநிதி தனது தொகுப்புரையில் விளக்கினார். “எழுந்திருங்கள், விழித்திருங்கள், இலக்கை அடையும் வரை நில்லாமல் ஓடுங்கள்” என்ற விவேகானந்தரின் வீர முழக்கம் இன்றும் உலக இளைஞர்களுக்கு ஒரு மந்திரமாக விளங்குவதை அவர் சுட்டிக்காட்டினார். விழாவின் சிகரமாக, 1893-ஆம் ஆண்டு சிகாகோ உலகத் மத மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய புகழ்பெற்ற உரையை மாணவி மிருதுளா ஜனனி மிகத் தெளிவாகவும், கம்பீரமாகவும் பேசி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைப் பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் டாக்டர் காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலில், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் இராதா பிரியா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நவீனக் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது கலாச்சார அடையாளத்தையும், வீரத் துறவி விவேகானந்தரின் கொள்கைகளையும் பின்பற்றிச் சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. இறுதியாக மாணவி அஸ்கதி நன்றியுரையாற்ற, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
