சென்னை:
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால், காவல் துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பில் சொன்னதைவிட குறைவாகவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர்.
இரண்டாம் நிலை காவலர்கள், எந்தவித தண்டனையும் இல்லாமல் 10 ஆண்டுகள் பணியில் இருந்தால் முதலாம் நிலை காவலராகவும், 15 ஆண்டுகள் பணி செய்தால் தலைமை காவலராகவும், 25 ஆண்டுகள் பணி செய்தால் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வும் வழங்கப்படும் என்றே தற்போதைய நடைமுறை உள்ளது.
பல ஆண்டுகளாக, இந்த ஆண்டு வரம்புகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார் வைத்திருக்கின்றனர். அரசு மற்றும் டிஜிபிக்கு பலமுறை மனுக்களும் அனுப்பி உள்ளனர்.
2021 சட்டசபை தேர்தலின் போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில், “7 ஆண்டுகள் பணி செய்தால் முதலாம் நிலை காவலராக, 10 ஆண்டுகள் பணி செய்தால் தலைமை காவலராக, 20 ஆண்டுகள் பணி செய்தால் சிறப்பு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு அளிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, முதல்வர் மானியக் கோரிக்கையில் அறிவித்ததின்படி, வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 10 ஆண்டுகள் பணி செய்தால் தான் முதலாம் நிலைக்கு உயர்வு என்பது தொடர்கிறது. 15 ஆண்டுகள் பதிலாக 13 ஆண்டுகள் பணி செய்தால் தலைமை காவலராகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இது அல்ல. தேர்தலில் வாக்களிக்க நாம் எடுத்த நம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்” என போலீசார் ஆவேசமாக தெரிவித்தனர்.