மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கிருஷ்ணர், ராதை வேடமணிந்து குழந்தைகள் வந்திருந்தது பக்தர்களை கவர்ந்தது :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ஆலயங்கள், பஜனைமடங்கள், வீடுகளில் கோலகலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது. குடும்பம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், குழந்தைகள் நன்றாக கல்வி கற்கவும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த பாடல்கள் பாடப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. வண்ண வண்ண உடைகளில் ராதை, கிருஷ்ணராக வேடமணிந்து வந்த குழந்தைகள் பக்தர்களை கவர்ந்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடத்தை அணிவித்து, கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, முறுக்கு, வெண்ணை, பழவகைகள் வைத்து படையலிட்டு குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தி கோயிலுக்கு அழைத்து சென்று வழிபாடு செய்தனர்.













