மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான தல்லாகுளம் சுற்றுச்சூழல் பூங்காவில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேற்கொள்ளப்பட்டு வரும் துரித பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பூங்காவில் “எக்கோ வாக்கர்ஸ் கிளப்” என்ற அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பூங்காவின் சில பகுதிகள் முறையான பராமரிப்பின்றி மாசடைந்து காணப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, வாக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் ஆகியோர், பூங்காவைத் தூய்மைப்படுத்தி மேம்படுத்தக் கோரி துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டனர்.
மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை நேரில் வரவழைத்து, போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, தூய்மையைப் பேணுவதற்காக பிரீத்தி மருத்துவமனை சார்பில் 10 நவீன குப்பை சேகரிக்கும் பெட்டகங்களை மருத்துவமனை அலுவலர் முகிலன், துணை மேயரிடம் வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி எஸ்.ஐ, எஸ்.ஒ, ஏ.இ உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், தல்லாகுளம் முருகன், வாக்கர்ஸ் கிளப் தலைவர் ரெங்கராஜ் பாண்டியன், பொருளாளர் டாக்டர் பெரியதம்பி, நிர்வாகிகள் முத்துக்குமார், பூமிநாதன், முன்னாள் கவுன்சிலர் திலகர், பாப்புலர் செல்வம், எஸ்.பி. சிவராம கிருஷ்ணன் மற்றும் தி.மு.க விவசாய அணியின் விஜயராம் ஆகியோர் பங்கேற்றனர். பூங்காவைப் பசுமையாகவும், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமலும் பராமரிக்கத் தேவையான கூடுதல் வசதிகளைச் செய்து தருவதாகத் துணை மேயர் உறுதியளித்தார்.

















