சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று பதில் அளித்து பேசிய முதலமைச்சர், கடந்த ஆட்சியில் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்த, தமிழகத்தின் நிதிநிலைமையை திமுக அரசு நிமிரச் செய்திருப்பதாக கூறினார். அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதால், தமிழகம் சாதனை மேல் சாதனை படைத்து, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
அமைதி பூங்காவாக இருப்பதால் தான், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிக அளவில் வருவதாக குறிப்பிட்ட முதல்வர், சாதி சண்டைகளோ, மதக்கலவரங்களோ இங்கு நடைபெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.
காவலர்களின் பணிகளை பெருமைப்படுத்தும் வகையில், இனி செப்டம்பர் 6 ஆம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர், அன்றைய தினம் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள காவலர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த மண்ணின் பூர்வகுடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களிலும், பொது புழக்கத்தில் இருந்தும் அந்த சொல் நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். திராவிட மாடல் ஆட்சியின் “2 பாயிட்ண் ஓ வெர்சன்” 2026-ஆம் ஆண்டிலும் தொடரும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.