மாநிலங்களவை தேர்தல் : திமுக, அதிமுக, கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் !

சென்னை :
வருகின்ற ஜூலை மாதத்தில் பதவிக்காலம் முடிவடைய உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவை திரும்பப்பெறும் கடைசி நாள் ஜூன் 12 ஆகும்.

2019 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் பி.வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பில் இருந்தனர். மேலும், ம.தி.மு.கவின் வைகோ, அ.தி.மு.க-வின் சந்திரசேகர் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்த நிலையில், தற்போதைய மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா (ரொக்கையா மாலிக்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில், மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அந்த இடத்தில் போட்டியிடுகிறார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன் தி.மு.க வேட்பாளர்கள் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். பின்னர், பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சட்டமன்றச் செயலகத்தில் கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அதேபோல், அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோரும் விரைவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

Exit mobile version