தார் வாங்குவதற்கு காசு இல்லை அதனால் சாலை போட முடியாது என கூறும் திருவாரூர் நகராட்சி ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – திருவாரூர் நகரப் பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை கண்டும் காணாமல் இருக்கும் திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*
திருவாரூர் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அள்ளுவதில் கால தாமதம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. திருவாரூர் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரியாமல் இருக்கின்றன. திருவாரூர் நகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கால்நடைகள் சாலைகளில் வலம் வந்து போக்குவரத்துக்கு இடையூறாக நின்று விபத்தை ஏற்படுத்துகின்றன. குளம் வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகள் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. இதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த மாதம் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி நிர்வாகத்தினர் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடுவோம் என கூறியிருந்த நிலையில், ஒரு மாதம் கழித்து மீண்டும் சென்று நகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்கும் போது தார் போடுவதற்கு நகராட்சியிடம் பணம் இல்லை எனவும், அதனால் சாலை போட முடியாது எனவும் திருவாரூர் நகராட்சி ஆணையர் அலட்சியமாக பதில் கூறியதாக கூறி திருவாரூர் நகராட்சி ஆணையரை கண்டித்தும், திருவாரூர் நகராட்சியை கண்டித்தும் திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், திருவாரூர் நகர் மக்களின் பிரதான கோரிக்கை மற்றும் மனுக்கள் மீது எந்தவித பரிசீலனையும் மேற்கொள்ளாத நகராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்தும் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்தும் திருவாரூர் நகராட்சி முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேட்டி : பஜ்ருல் ஹக் மாவட்ட தலைவர் மனிதநேய மக்கள் கட்சி.














