வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை மற்றும் வீடு வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தி தராததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் அரசு ஆவணங்களை தரையில் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை மற்றும் வீடு வழங்கும் திட்டத்தில்
திருநங்கைகளுக்கு அரசு சார்பில் இடம் வீடு கட்டித் தர வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 21 நபர்களுக்கு வீடு இடம் வழங்க பெயரை சமூக நலத்துறையில் திருநங்கைகள் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று சமூகநலத்துறை அலுவலகத்திற்கு வந்த திருநங்கைகளுக்கு ஆறு பேருக்கு மட்டுமே இடம் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அரசு ஆவணங்களை தரையில் போட்டு அனைவருக்கும் அரசு வீடு வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்திதான் திருநங்கைகள் தங்களுக்கான உரிமைகளை பெற வேண்டி உள்ளதாகவும் கூறியுள்ள திருநங்கைகள் உரிய உத்திரவாதம் அளிக்கும் வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
