2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஒரு ஓய்வு நாளில் எருசலேம் நகரத்திற்கு உட்பிரவேசித்தார். அப்போது ஜனங்கள் எல்லாரும் அவரை புதிய கோவேறு கழுதையில் ஏற்றி தங்கள் வஸ்திரங்களையும் இலை தழைகளையும் வழி எங்கும் பரப்பி முன் நடப்பாரும் பின் நடப்பாரும் ஓசன்னா கர்த்தரை நாமத்தினால் வருகிறவர் சோத்தரிக்கப்பட்டவர் என்று குருத்தோலைகளை பிடித்து ஆர்ப்பரித்து அவரை வரவேற்றார்கள். அன்று முதல் இன்று வரை அதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்படுகிறது.
தேனி என் ஆர் டி ரோட்டில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சபைகுரு அஜித் ஸ்டேன்லி தலைமையில் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் தாமரை செல்வன் முன்னிலையில் காலை 8 மணி முதல் 9 மணி வரை குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது. சபை மக்கள் வெள்ளை ஆடை அணிந்து கைகளில் குருத்தோலை ஏந்தி ஓசன்னா என பாடி தேனி என் ஆர் டி நகரில் இருந்து பெரியகுளம் ரோடு வழியாக பழைய அரசு மருத்துவமனை சாலை சமதர்மபுரம் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனை ஆலயத்தில் நடைபெற்றது. ஐ.எம்.எஸ் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் தாமரை செல்வன் சிறப்பு செய்தி அளித்தார். இதில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டனர். ஆலயம் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் ஏற்பாடுகளை சபையின் செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ஜான்சன் மாணிக்க ராஜன் மற்றும் குருசேகர குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

















