சென்னை : டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடைபெறும் விசாரணை தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் பின்னர், விக்ரம் ரவீந்திரனின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டன.
இதற்கு எதிராக, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறையின் நடவடிக்கையைத் தடை செய்ய வேண்டும் என்றும், சீலை அகற்ற வேண்டும் என்றும் கோரினர்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டு, அவருக்கு டாஸ்மாக் முறைகேட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் வெறும் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமே என்றும் தெரிவித்தார். மேலும், அவரது செல்போன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.
விக்ரம் ரவீந்திரனின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.கிரி மற்றும் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, அவருக்கு டாஸ்மாக் ஊழலுடன் தொடர்பே இல்லையெனவும், அதே நேரத்தில் வீடும் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளதன் சட்டபூர்வமான அடிப்படை என்ன? என்பதே கேள்வி என வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள்,
“சீல் வைப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது ?”
“சோதனை நடத்தலாம், ஆவணங்கள் பறிமுதல் செய்யலாம், ஆனால் வீட்டையே சீல் வைப்பது எப்படி ?”
என கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், சோதனைக்குச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததால் சீல் வைக்கப்பட்டது என்றும், அந்த இடத்தில் நோட்டீஸ் ஒட்டியதாகவும், ஆனால் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாக இருந்து தற்போது நீதிமன்றத்தைக் நாடியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
உடனே நீதிபதிகள்,
“வீடு பூட்டியிருந்தால் போலீசாரின் உதவியுடன் கதவை திறந்து சோதனை நடத்தலாமே? வீட்டு கதவை சீல் வைப்பது சட்டப்படி எந்த விதத்தில் ஏற்புடையது?”
எனக் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முழுமையான பதிலை சமர்ப்பிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.